Chennai High Court orders removal of ban on Kirija Vaithiyanathan's appointment

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதன், தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராகவும், நில நிர்வாகத் துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் சுற்றுச்சூழல் விவகாரங்களை அவர் கவனித்துள்ளதாக கூறி, அது சம்பந்தமான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த, அதற்கான குழுவின் தலைவராகவும், கூவம் நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும், மருத்துவக் கழிவுகள் மேலாண்மையில் அனுபவம் உள்ளதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இதன் மூலம் அவர் பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைப் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.