Skip to main content

கொலை வழக்கு ஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்!- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயிரம் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக அரசு, 2018 பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. கொலை வழக்குகளில் ஆயுள் கைதிகளாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேரை, தமிழக அரசாணையின்படி விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

chennai high court prisoners release issues govt officers

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களை முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆயுள் கைதிகளின் பெற்றோர் காளியம்மாள், ஆசியா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
 

இந்த வழக்குகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என பல முறை அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 21- ஆம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, ஐந்து பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்குகள் 25- ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போதும், விசாரணையை தள்ளிவைக்கும்படி அரசுத்தரப்பில் கோரப்பட்டதை அடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். நேரில் ஆஜராகாமல் இருக்க உச்சநீதிமன்றத்தை அணுகி தகுந்த உத்தரவை பெற்றுக் கொள்ளலாம் எனவும், இல்லாவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.