சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.4,37,950- ஐ அதிகரித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகவும், அவர் தற்போது எந்த ஊனமும் இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாகவும், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ரூ.4,37,950 இழப்பீட்டு தொகையை, ரூ.67,35,000 ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டதோடு, மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளைப் பட்டியலிட்ட நீதிபதிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதைக் கண்காணிப்பதற்கு தனிப்படைகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனைக் கருவிகளை காவல்துறைக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேகக் கருவிகளைப் பொருத்தும்படி, வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாக மாதந்தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.