Advertisment

உரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை!- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

chennai high court order tamilnadu government

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை பிணவறைகளில், உரிமை கோரப்படாமல் உள்ள சடலங்களைத் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், மீண்டும் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்குப் பின், அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, புதைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளன. தமிழகத்தில் வழக்குகளைக் காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் போன்றவை எடுத்து பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. தகனம் செய்வதால் அதிக செலவும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், காவல்துறை டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழகம் முழுவதும். உரிமை கோராமல் 184 சடலங்கள் உள்ளன. மேலும், உரிமை கோராமல் உள்ள சடலங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அதில் வரும் வருமானத்தில், 50 ஆயிரம் ரூபாயை அரசுக்கும், மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை பிணவறைகளை மேம்படுத்துவதற்கும், பணியாளர்கள் செலவுக்கும் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர். தற்போது தமிழகத்தில் இதுபோன்ற உரிமை கோராமல் உள்ள சடலங்கள், சுமார் 2400- க்குமேல் உள்ளன. மாநில குற்ற ஆவணப் பிரிவில் இதற்கான முழு விவரங்கள் உள்ளன. ஆனால், அந்த அடிப்படையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். மேலும், இந்தச் சடலங்களை அடக்கம் செய்ய, உரிய நடைமுறை இதுவரை வகுக்கவில்லை எனத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறியும், மீண்டும் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை ஜூன் 27- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Chennai government highcourt Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe