chennai high court officers cars purchase

Advertisment

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க அரசுநிதியை ஏன் பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கிராம கோவில்களை சீரமைக்க, பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்கி, அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில் நிதியைப் பயன்படுத்தி, அமைச்சருக்கு கார் வாங்குவதற்கும், அறநிலையத் துறை அலுவலகம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை.உபரி நிதி ஒதுக்குவதற்கான கோவில்கள், இதுவரை அடையாளம் காணவில்லை. கடந்த மூன்று மாதங்களில் பல கோவில் சொத்துகள் விற்கப்பட்டுள்ளன எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு கார் வாங்க அரசு நிதியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ‘சிவன் சொத்து குலம் நாசம்’என்பது பழமொழி.சட்டங்கள், விதிகள் இருந்தாலும்அவை அமல்படுத்தப்படுகிறதா? இதுவரை கோவில் சொத்துகள் கணக்கிலிடப்பட்டுள்ளனவா? அந்த நிலங்கள் யார் பெயரில் உள்ளன? எனக் கேள்விகள் எழுப்பினர்.

மேலும், இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் திருப்தி இல்லையென்றால், அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். அறநிலையத்துறை பட்டியலில் உள்ள கோவில் சொத்துகளை 10 ஆண்டுகளானாலும் கணக்கிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உபரி நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்ற இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 1- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.