கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கு லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொது செயலாளர் கோபிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘கரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமேபயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளது. மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீசியன் பணியாகும். ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், லேப் டெக்னீசியன் மூலமாகவே மாதிரிகளை எடுப்பதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.

Advertisment

chennai high court lab technicians

+2- க்கு பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள அவர்களால், உடலியல் மற்றும் உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது என விதிகள் உள்ளன. ஆனால், கரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என விதிமுறைகளை மீறும் வகையில், மருத்துவமனையில் உள்ள உயரதிகாரிகள், லேப் டெக்னீசியன்களை கட்டாயப்படுத்துகின்றனர். கரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்களும் அவர்களுக்கு வழங்குவதில்லை.

Advertisment

ி

உலக சுகாதார நிறுவன விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய- மாநில அரசுகளுக்கும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை முதல்வர்களுக்கும் ஏப்ரல் 1- ஆம் தேதி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதிரிகள் எடுப்பதற்கு வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.