Does the government have any plans to intensify the curfew in Chennai? Govt to issue explanation tomorrow

Advertisment

சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 70 சதவீதம் பேர் சென்னையைசேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும்அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை காணொலிக் காட்சி மூலம் விசாரித்து முடித்தபின், தமிழக அரசின் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

சென்னையில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் எடுக்கவில்லை. தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நாளை (ஜூன் 12) விளக்கம் அளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.