Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான பார்வையை மாற்ற நல்ல வாய்ப்பு!- மாணவிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

chennai high court government schools students

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்கச் செய்ய ஏதுவாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என, நவம்பர் 20- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு கிடைக்கும் 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும். சில மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதல் இடங்கள் கிடைக்கும்.’எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து,‘முதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு, தனியார் கல்லூரிகளில் இடம் பெற்றும், கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால் மருத்துவ இடம் கிடைக்கும் என்ற உத்வேகத்தை வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.’ என அறிவுறுத்திய நீதிபதி, 51 மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர்  17- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.