ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி இன்று (28/02/2020) புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9- ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11- ஆம் தேதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

CHENNAI HIGH COURT FORMER PM RAJIV GANDHI CASE NALINI AGAIN FILED

இந்தப் பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு தீர்மானம் பூஜ்ஜியம் என்றும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நளினி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின்பு, அது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் செயல்படாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார். தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் மாருராம் என்பவரது, வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும், எனவே ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.