chennai high court coronavirus ppe and masks, sanitisers

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினந்தோறும் 15 ஆயிரம் முழு உடல் பாதுகாப்புக்கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Advertisment

Advertisment

கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் பாதுகாப்புக் கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் கே.எஸ்.செல்வக்குமார் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று தடுப்புப் பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள், பி.பி.இ. எனப்படும் முழு உடல் பாதுகாப்புக் கவச உடையை அணிவது, அதைப் பயன்படுத்திய பின் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

மேலும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கைகளைச் சுத்தமாக வைப்பதற்குத் தேவையான கிருமி நாசினி, சோப் போன்றவை, பற்றாக்குறை இல்லை. தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தினந்தோறும் 15 ஆயிரம் முழுக் கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மருத்துவப் பணியில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல், தமிழக காவல்துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முகக்கவசம், கையுறை வழங்குவதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா வார்ட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்கள் முழு உடல்பாதுகாப்புக்கவச உடை மற்றும் என்- 95 முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்தர கையுறை, ஷூக்கள் மற்றும் முழுஉடல்பாதுகாப்புக்கவச உடைகள் வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

http://onelink.to/nknapp

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த ஆட்சேபனை அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி மருத்துவர்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை என்றும், மருத்துவர்களுக்குக்கொடுக்கப்பட்டது PPE கிட்டே கிடையாது என்றும் குற்றம் சாட்டியுள்ளதுடன், அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Surgical Apron என்று சொல்லப்படும் மேலுடைதான் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைத் தொடங்க அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு அடுத்த வாரத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.