Skip to main content

தவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தவணைத் தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், நாட்டில் பல கோடி பேர் தற்காலிகமாக வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 27- இல்  ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச் செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது. 


அதேபோல், கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாதென்று நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவினால் தெரு வியாபாரிகள் தொடங்கி பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை, சுமார் 90 சதவீதத்தினர் வருமானம் இன்றி தவிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளோ, பொருள் உதவிகளோ போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய மாத வருமானம் இருந்தபொழுது வாங்கிய கடன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தவணை முறையைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தவணையை மூன்று மாதங்கள் காலதாமதமாகச் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது ஆறுதலாக இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இயல்புநிலை திரும்பாத நிலையில், அதன் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருவதால்,  தவணை செலுத்தும் சலுகையை மேலும் இரண்டு மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 
 

 

 

chennai high court banks emi lockdown time


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள தவணை செலுத்தும் சலுகையைப் பயன்படுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தும் வகையில் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான மாத வருமானம் இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் கணக்குகளில் செலுத்தப்பட்டவுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த இசிஎஸ் முறைப்படி அவர்கள் கடனுக்கான தொகை பலரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
 

http://onelink.to/nknapp


தவணை மற்றும் வட்டி செலுத்த விலக்களிக்க காலத்தை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிடும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் பிரதான கோரிக்கை வைத்துள்ளார் அதேபோல் இசிஎஸ் தொகையை வசூலிப்பதற்கான  உத்தரவுகளை (standing instructions) நிறுத்திவைக்க வேண்டும் எனவும், வங்கிகள் மற்றும் வங்கியைச் சாராத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகையை வட்டியுடன் மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செவ்வண்ணன் மோகன் தெரிவித்தார். பின்னர் உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!