அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! -பல்கலைக்கழக மானியக்குழு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டம்

chennai high court anna university arrears exams students

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப்பருவத் தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், இறுதிப்பருவத்தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை நவம்பர் 20- ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை, அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவித்துள்ளதாகக் கூறி, ராம்குமார் ஆதித்தன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரியர் தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாகத் திரும்ப பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால், முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகள், நவம்பர் 20- ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், இந்த வழக்கையும், அந்தவழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் நிலைப்பாடு எனவும், இந்த வழக்கை, அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பிலும் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை வரும் நவம்பர் 13- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Anna University arrear exam chennai high court students
இதையும் படியுங்கள்
Subscribe