Skip to main content

ஜெ. புகைப்படத்தை சட்டபேரவையில் இருந்து அகற்ற கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

Published on 27/04/2018 | Edited on 27/04/2018
jayalalitha


உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டபேரவையில் இருந்து அகற்ற கோரிய வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
 

தமிழக சட்டப்பேரவைக்குள் ஜெயலலிதாவின் உருவ படம் நிறுவப்படும் என பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் பேரவை தலைவர் தனபால் திறந்துவைத்தார்.
 

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்டவிரோதம் என்றும், எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு சபாநாயகர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி சபாநாயகர் திறந்துவைத்துள்ளார் என்பதால் அதை அகற்ற வேண்டுமென திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 

இந்த வழக்கில் திமுக தரப்பில்  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால், காவல் நிலையங்களில் ரவுடிகளின் புகைப்படங்கள் வைக்கும் சூழல் ஏற்படும் எனவும், சபாநாயகரின் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன கேள்வி உள்ளது. அதற்கு இந்த நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும் எனவும் வாதிட்டிருந்தார்.
 

மேலும் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது  வரும் சபாநாயகர் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும்; சபாநாயகரின் அதிகார வரம்புக்குள்  நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்திருந்தது.
 

இந்த வழக்கில் இன்று மதியம் 2:15 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்