
சென்னையில் மழை பாதிப்புகளை மூன்றாவது நாளாக நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
நீங்கள் நிறையப் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படி இருக்கிறது?
மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறோம்.
Water-logging பிரச்சனை சிறிது குறைந்திருக்கிறதா?
ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாகக் குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ஸ்மார்ட் திட்டம் என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சித் துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்துப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இது குறித்து உரிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
இதெல்லாம் முடிந்த பிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.