Chennai Ennore  Ramakrishna Nagar area issue

Advertisment

சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர்ப் பகுதியில் முஸ்தபா என்பவர் கடந்த 21ஆம் தேதி (21.05.2025) தனது வீட்டைப் பராமரிப்பதற்காகப் பள்ளம் தோண்டியுள்ளார். அந்த பள்ளத்தில் இரும்பு பொருள் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். இதனைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் அதனைச் சோதனை செய்தனர்.

அதில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு பொருளானது வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பல ஆண்டுகளாக இரும்பு குடோன் செயல்பட்டு வந்ததால் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆவடியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் வெடிகுண்டைச் சோதனைக்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு இது போர்களில் பயன்படுத்தப்படும் ‘ஏரியல் பாம்’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் விதமாக திருவற்றியூர் சாத்தான் காடு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே ஆட்கள் அரவராம் இல்லாத பகுதியில் வெடித்து செயலழிலக்க வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை கமாண்டோ படையினர் வெடித்து செயலிழக்க வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.