Skip to main content

“வெளியே வந்த பிறகுதான் அது விமான விபத்து என்று தெரியவந்தது” - சென்னை மருத்துவர் பேட்டி!

Published on 13/06/2025 | Edited on 13/06/2025

 

Chennai doctor says It was only after we came out that it was a plane incident

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (12.06.2025) மதியம் 01.39 மணிக்கு பேயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை (விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.

இருப்பினும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விமானம் வெடித்துச் சிதறி விழுந்த பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழுமத்தின் சார்பாக தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான விபத்து ஏற்பட்ட போது நடந்த விடுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் டாக்டர் அருண் பிரசாந்த் இந்த சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், “மருத்துவத்தில் முதுகலை 2ஆம் ஆண்டு நுண் உயிரியல் பிரிவில் படித்து வருகிறேன். சென்னையில் இருந்து வந்து இங்கு படித்து வருகிறேன். நேற்று, மதியம் 1:30 மணியளவில், நாங்கள் ஐந்தாவது மாடியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது ஒரு பயங்கர சத்தமும் வெடிச்சத்தமும் கேட்டது. திடீரென்று, புகை எங்கும் பரவியது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் புகையால் சூழப்பட்டோம். நான் முதல் மாடிக்கு ஓடி, பின்னர் அங்கிருந்து கட்டிடத்திலிருந்து குதித்தேன். விபத்து ஏற்பட்ட இடங்களை சுற்றி சில குடும்பங்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர். நாங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே வந்த பிறகுதான் அது விமான விபத்து என்று எங்களுக்குத் தெரியவந்தது. நாங்கள் வெளியே நின்ற 15-20 நிமிடங்களுக்குப் பிறகு மீட்பு வந்தது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்