மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு- 20 பேர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (19/04/2020) உயிரிழந்தார்.

இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (19/04/2020) இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai doctor incident peoples

அதன் பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்துக் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.

chennai doctor incident peoples

http://onelink.to/nknapp

ஏற்கனவே கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலைத் தகனம் செய்ய இருவேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உள்ளது. இதில் 411 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai corona virus Doctor incident
இதையும் படியுங்கள்
Subscribe