கேளம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல நடிகர் ரஜினிகாந்த் முறையான இ-பாஸ் பெற்றாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குத் துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. சினிமா படப்பிடிப்பும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லம்போகினி' சொகுசு காரை ஓட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் பயணத்தில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றுச் சென்றாரா? என்பதும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.