dddd

Advertisment

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. என்ஜினீயங் படிப்பு முடித்த இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சாஃப்ட்வேர் என்ஜினீயரான நிரேஷ்குமார் ஐதராபாத்தில் பணியாற்றி வந்ததால், இருவரும் அங்கு வசித்து வந்தனர்.

திருமணமான சில வாரங்களிலேயே கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா தனது கணவரைப் பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். திருமணமான 3 மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டுக்கு வந்தததால், மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் கடந்த 29-ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

ddd

விசாரணையில் பிரியங்கா தற்கொலைக்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் பிரியங்கா, திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர். முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் என்னைக் கொடுமைப்படுத்தினர்.

இதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisment

கடிதம் கிடைத்ததையடுத்து உயர் போலீசார் அதிகாரிகளிடம் நடந்ததை சொன்ன காவல்நிலைய போலீசார், அவர்களின் அறிவுறுத்தலின்படி வரதட்சணை கொடுமையின் கீழ் நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப் பதிவு செய்து, நிரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.