chennai cbi court hiring february seventeenth

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகளை இன்னும் முடிவடையவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலை பொருட்கள்விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள்விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும்கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்தியமாநில அரசு உயர் அதிகாரிகளுக்குலஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்ததாகத்தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்தியமாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

Advertisment

இந்நிலையில், இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்த சிபிஐ கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன்,சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரைகடந்த 2016 ஆண்டு கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்தியமாநில அரசு உயரதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள்டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்தியமாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையைபிப்ரவரி 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.