Skip to main content

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு!- சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி மேல்முறையீடு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
 

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

CHENNAI Ayanavaram JUDGEMENT HIGH COURT

இந்த வழக்கில் பிப்ரவரி 3-ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது. மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
 

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எலக்ட்ரீசியனாகப் பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில், பிளம்பர் என குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என்றும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.