சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால், மத்திய வெளியுறவு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் சீன மக்கள் தங்கள் நாட்டு அதிபருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். அதேபோல் தமிழக அரசு சார்பில் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்பு மாலை 04.00 மணியளவில் சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஏற்கனவே சென்னை வந்துள்ளஇந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவளம் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னையில் கிண்டி, விமான நிலையம், ஓஎம்ஆர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.