Skip to main content

போயஸ் கார்டன் ஜெ' இல்லத்தை நினைவில்லமாக மாற்றத் தடையில்லை! -அரசு உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என மனு தள்ளுபடி!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

chenna poes garden former cm jayalalithaa chennai high court

 

போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து, போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது - 

 

மனுதாரர் தரப்பு:

கரோனா நேரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் மனுதாரர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தும் பணி தொடர்கிறது. சட்ட விதிகளை மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நீதிபதி:

என்ன தகுதி அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது?

 

மனுதாரர்:

மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை.

 

நீதிபதி:

இது பொதுநலம் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு மறுபரிசீலனை செய்ய... எப்படி அரசு செயல்படுகிறது எனத் தெரியவில்லை? நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வர் அதிகாரப்பூர்வ இல்லமாக அறிவிக்கக் கூறியது.

 

மனுதாரர்:

500 பேருக்கு மேல் குடியிருப்போர் சங்கத்தில் உள்ளனர்.  குறுகிய சாலை மற்றும் சமூக பாதிப்பு மதிப்பீடு செய்யவில்லை. விசாரணை நடந்தது.  ஊரடங்கு நேரத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டப்படுகிறது. சட்டபூர்வ வாரிசுகளை விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் பயன்பாடு என்ன உள்ளது?

 

சமூக பாதிப்பு மதிப்பீட்டின் போது குடியிருப்பு வாசிகளின் குறைகள் கேட்கப்படவில்லை. அறிக்கை நகலும் வழங்கப்படவில்லை. கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை முழுவதும் கண்துடைப்பாகவே நடந்தது. 

 

அரசுத்தரப்பு ஏ.ஜி.:

அவசரம் இல்லை. 5/10/2017 முதல் துவங்கியது. இது முதல் நினைவில்லம் அல்ல. காமராஜர், வ.உ.சி. உள்பட 20-30 நினைவில்லங்கள் உள்ளன. சுற்றுலாத் துறை பராமரிக்கிறது. 5/10/2017 -க்கு பின் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஏற்கனவே,  பொது நல வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் அடிப்படை உரிமை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. விதிமீறல்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நினைவில்லம் அமைக்காமல், முதல்வர் இல்லமாக மாற்ற நீதிமன்றம் கருத்துதான் தெரிவித்தது. அது அரசின் பரிசீலனையில் உள்ளது.

 

இல்லத்தில் உள்ள அசையா சொத்துகளைக் கையகப்படுத்தவே, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சொத்துகளை மதிப்பீடு செய்ய, இழப்பீடு நிர்ணயிக்க, அதிகாரி நியமிக்கவும்,நினைவில்லத்தைப் பராமரிக்க ஜெயலலிதா அறக்கட்டளை அமைக்கவும் தான் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி முடிவை எட்டவில்லை. அப்போது, மனுதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும். நினைவில்லத்தைப் பார்வையிட மக்கள் வருவார்கள் என்பதால் எதிர்க்கிறார்கள். தற்போதைய நிலையில், முன் கூட்டியே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தலையிட எந்தக் காரணமும் இல்லை.

 

ஏ ஏ ஜி ராஜகோபால்:

2019-இல் தான் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. 2017-இல் இருந்தே நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு தெரியும். எந்த அவசரமும் காட்டவில்லை. எல்லா விசாரணையிலும் அப்பகுதிவாசிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

2017-இல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கி விட்டன. போயஸ்கார்டனில் வசிப்பவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சமூக பாதிப்பு மதிப்பீடு ஆய்வின் போது, குடியிருப்புவாசிகளின் ஆட்சேபங்களும் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இறுதி முடிவை எட்டவில்லை.

 

ஆகவே, ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன. 

 

http://onelink.to/nknapp

 

மனுதாரர் கூறுவது போல, இதில் எந்தப் பொது நலனும் சம்பந்தப்படவில்லை. ஏராளமான மக்கள் வருகை தருவர்; இடையூறு தருவர் என்ற மனுதாரர் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளதில் இருந்து, அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உள்ளனர் என்பது உறுதியாகிறது. அதிகாரிகள், குடியிருப்புவாசிளின் ஆட்சேபங்களைக் கருத்தில் கொள்ளாமல், அவசர கதியில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பு தெரிவித்தது.

 

இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது. உயர்நீதிமன்ற ஆலோசனை கருத்தில் கொள்ளப்படவில்லை என்ற வாதம் நிலைத்து நிற்கவில்லை. காரணம், அதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை என்றும், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனவும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.