ADVERTISEMENT

ஆண்டு விழா கொண்டாடிய முன்னாள் குடிமகன்; வைரலான போஸ்டர்  

05:47 PM Feb 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன் (வயது 53). இவருக்கு கடந்த 32 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகரித்து வர குடும்பத்தினரும் உறவினர்களும் இவரை எச்சரித்துள்ளனர். இருப்பினும் ஆரம்பத்தில் யாரையும் பொருட்படுத்தாத மனோகரன், ஒரு கட்டத்தில் குடியை விட்டு விட முடிவெடுத்துள்ளார். ஆனால், அவருக்கு அது அவ்வளவு எளிதானதாக இல்லை. இருப்பினும், குடியை விட்டு விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து 2022ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியுடன் மது பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

மது பழக்கத்தில் இருந்து மீண்ட இவருக்கு அதன் நன்மைகள் புரிந்துள்ளது. ஒரு வருடமாக ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக உணர்ந்த இவர் இந்த மகிழ்ச்சியை பலருடன் பகிர்ந்துகொள்ள விரும்பி அதன் மூலம் ஒன்றிரண்டு பேராவது விழிப்புணர்வு பெற வேண்டும் என நினைத்துள்ளார். இதை வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்த மனோகரன், போஸ்டர் அடிக்க முடிவு செய்து அதற்கு ஒரு ஸ்பான்சரையும் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து மனோகரன் கூறுகையில், “குடி பழக்கத்தால் தனது மரியாதையை ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்தேன். பேரன் பேத்திகள் கூட என்னிடம் சரியாகப் பேசவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 300 முதல் 400 ரூபாய் வரை குடிக்கு செலவிட்டதால், வீட்டு மனை ஒன்றையும் விற்று விட்டேன். இதனால் குடி பழக்கத்தை விட்டு விட்டேன். அதன் பின்னர், வீட்டிலும் ஊரிலும் மரியாதை அதிகரித்துள்ளது. நான் பலன் பெற்றது போலவே மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நோக்கில் போஸ்டர் அடித்ததாக” கூறுகிறார். இவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT