ரசாயன மாம்பழங்கள் விற்கப்படுவதாக வெளியான புகாரைத் தொடர்ந்து திருவள்ளூரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரசாயன ஸ்பிரே அடித்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக புகார்கள் இருந்தது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாம்பழ மண்டிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். கற்கள் மற்றும் ரசாயன ஸ்பிரேக்கள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனையானது நடைபெற்றுவருகிறது.