விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி கவிதா(30). இவர், நன்னாடு என்ற கிராம பகுதியில் துணிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் வந்துள்ளனர். அவர்கள், கொண்டலு, அங்கமா ராவ் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் கவிதாவிடம் தங்களிடம் அரை கிலோ தங்கக்கட்டி உள்ளது என்றும், அதற்கு ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால் போதும், அந்தத் தங்கக் கட்டியை கொடுத்து விடுவதாகவும் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். அதனை நம்பி கவிதா அவர்களிடம் பணத்தைக் கொடுத்து அந்த தங்கக் கட்டியை வாங்கியுள்ளார்.
அதை வாங்கிய சிறிது நேரத்தில் அது உண்மையான தங்கக்கட்டி தானா என்பதை சோதித்துப் பார்ப்பதற்கு முடிவு செய்த கவிதா அதை உறவினர்கள் மூலம் சோதனை செய்வதற்கு கொடுத்தனுப்பியுள்ளார். சோதனையில் அது போலியான தங்கக்கட்டி என்பது தெரியவந்தது. தன்னை ஆந்திர தம்பதி ஏமாற்றிவிட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த கவிதா, தனது உறவினர்கள் மூலம் அவர்களை தேடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏனாதிரிமங்கலம் என்ற கிராமத்தின் அருகே அவர்களை கண்டுள்ளனர். அங்கேயே அவர்களை வளைத்துப்பிடித்து. உடனடியாக விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலி தங்கக் கட்டி கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட அந்த ஆந்திர மாநில தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.