
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் புகழேந்தி தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 7ஆம் தேதி (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு அளித்தனர். அதில், “கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். அதோடு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்குத் தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையம் மூலமாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் படி நீதிமன்றத்திற்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளதோ அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது. அந்த மனதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிற தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது” எனப் பேசினார்.