சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மற்றும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இன்று (27.11.2023) முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் பயணிகள் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் குறையும் என்பதாலும், ரயில் பயணத்தின் போது நெரிசல் குறையும் என்பதாலும் பயணிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.