Skip to main content

சர்ச் கமிட்டியின் தலைவரை மாற்றுக !  -  ம.ம.க.தலைவர் போர்க்குரல் ! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

v Change the Chairman of the Church Committee!

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்காக, தகுதியான பேராசிரியர்களை கண்டறிந்து தகுதியானவர்களை பட்டியலை தருவதற்கான சர்ச் கமிட்டியை சமீபத்தில் அமைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த சர்ச் கமிட்டியின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியை நியமித்தார்.  ஆனால், அவரை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என போர்க்குரல் எழுப்புகிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா. 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி ஆகஸ்ட் 2021 முதல் காலியாக உள்ளது. இப்பல்கலைக் கழகத்திற்கு அடுத்த துணைவேந்தரைத் தேர்வு செய்யவுள்ள தேர்வு குழுவுக்கு தமிழக மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் பாஜக அரசின் திட்டமான புதிய கல்விக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான பேராசிரியர் பாலகுருசாமியை ஆளுநர் நியமித்திருப்பது மிகுந்த அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தேடல் குழுவின் சிண்டிகேட் பிரதிநிதியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரனும், செனட் பிரதிநிதியாக காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.மருதமுத்துவும் நியமிக்கப்பட்டனர். 

 

இந்தத் தேடல் குழுவின் தலைவராக முனைவர் இ.பாலகுருசாமியை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளதாக தெரியவருகிறது. ஒன்றிய பாஜக அரசின் முகவராக உள்ள ஆளுநர், ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை உயர்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்திடுமாறு, துணை வேந்தர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழக அரசு, சமூக நீதிக்கெதிரான புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற முடிவை ஆணித்தரமாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் கொள்கையை மீறி, புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் புகுத்திட ஆர்வம்காட்டி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடல் குழுவிற்குள் இ.பாலகுருசாமியைப் புகுத்துவது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது.


தமிழகப் பல்கலைக் கழகங்களில் முழுத் தகுதியுள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படாமல் கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில் சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையின் தீவிர ஆதரவாளரும், ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்களைப் பொதுவெளியில் தொடர்ந்து ஆதரித்து வருபவருமான இ.பாலகுருசாமியின் நியமனம் மிகுந்த கவலையளிக்கிறது. இவர் மாற்றப்பட்டு இப்பொறுப்பிற்கு, சமூக நீதிக் கொள்கையில் நாட்டமுள்ள தகுதியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் " என்று  வலியுறுத்துகிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.