8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Chance of rain in 8 districts

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களிலும் அதி கனமழை பொழிந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (28.05.2025) காலை 06.45 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் நீலகிரி, கோவை, ஆகிய இரு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. அதோடு தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால், வெயில் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Coimbatore Courtallam nilgiris rain weather
இதையும் படியுங்கள்
Subscribe