Chance of rain in 8 districts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. மேலும் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (30.11.2024) கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதே சமயம் கனமழை காரணமாக புதுச்சேசி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (28.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று (28.11.2024) காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம்,கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.