![Chance of rain for 6 days in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/NhdPH_o_q-wfjR628daIEI-wkhNjFpFqGF7SMzCZeiY/1702318318/sites/default/files/inline-images/rain-art-students-school.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (12.12.2023) முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (11.12.2023) காலை வரை இயல்பைவிட 3 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 398.3 மி.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 385.3 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. அதே சமயம் சென்னையில் வடகிழக்கு பருவமழை 47 சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளது. அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 731.9 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.