வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து தற்போது 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.