![Chance of heavy rain in 16 districts before 1 am!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rk9wvHHAs-uFtv_a-HjjRzL6Ju0uGE6jLfRDez55mLg/1701536932/sites/default/files/inline-images/rai_3.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ‘மிக்ஜம்’ புயல் உருவாகவுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உட்பட 16 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிக்குள் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.