Chance of heavy rain in 11 districts

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நாளை கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். அதேபோல் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டிய அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென் தமிழக, கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.