Skip to main content

காவல்துறைக்கு சவால்; தொடரும் அசம்பாவிதம்! - பதற்றத்தில் ஜேடர்பாளையம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension

 

ஜேடர்பாளையத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக ஓய்ந்திருந்த மர்ம சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அங்கு மர்ம நபர்கள் டிராக்டருக்கு தீ வைத்ததோடு, வயல்களில் வாழை, குச்சிக்கிழங்கு பயிர்களையும் நாசம் செய்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவருடைய மனைவி நித்யா (28). இவர், கடந்த மார்ச் 11ம் தேதி, வீட்டின் அருகே உள்ள முள் புதர் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது மர்ம நபர்கள் இவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாகக் கொலை செய்தனர். 

 

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவனை ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியதை அடுத்து, வழக்கு விசாரணை உள்ளூர் காவல்துறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம் 

 

நித்யா கொலைக்குப் பிறகு ஜேடர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்பு ஆலைகள், டிராக்டர், விவசாய உபகரணங்கள், தனியார் பள்ளி பேருந்து ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிலரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசினர். எம்.ஜி.ஆர். என்கிற முத்துசாமி என்பவர் நடத்தி வரும் கரும்பாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த கொட்டகை மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற வாலிபர் கொல்லப்பட்டார். 

 

இது மட்டுமின்றி, முருகேசன் என்பவரின் வயலில் இருந்த வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்தனர். பின்னர், பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜனின் வயலில் 3000 பாக்கு மரக்கன்றுகளை வெட்டி வீழ்த்தினர். அதன் தொடர்ச்சியாக சில விவசாயிகளின் வயல்களில் பயிரிடப்பட்டு இருந்த குச்சிக்கிழங்கு பயிர்களையும் மர்ம நபர்கள் நாசம் செய்தனர். 

 

தொடர்ச்சியாக அட்டூழியங்கள் அரங்கேறி வந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காவலர்கள் ஜேடர்பாளையம், வீ.கரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம் 

 

பல இடங்களில் புதிதாகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், சின்ன சின்ன கிராமங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், வயல்களில் இறங்கி நாசம் செய்து வந்த கும்பலை இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மற்றொருபுறம் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருந்தன. 

 

இதனால் அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், செப். 6ம் தேதி நள்ளிரவு, பல்லக்காபாளையம் அருகே, கருப்பண்ணன் மகன் சுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான வயலில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராக்டர் வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அருகில் உள்ள வீரமணி (40), ராமசாமி (70) ஆகியோருக்குச் சொந்தமான வயலில் வாழை மரங்கள், குச்சிக்கிழங்கு செடிகளையும் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதனால் மீண்டும் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. 

 

Challenge the police; Continued disaster! Jodarpalayam in tension
கோப்புப் படம்

 

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று பார்வையிட்டனர். இரவு பகலாக 7 மாவட்டக் காவல்துறை கண்காணிப்பு, அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள், காவல்துறை அதிகாரிகளின் இரவு ரோந்து என பலகட்ட கண்காணிப்பையும் மீறி இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் ஒட்டுமொத்த காவல்துறையின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. 

 

இதற்கிடையே, டிராக்டருக்கு தீ வைப்பு மற்றும் வயல்களை நாசப்படுத்திய சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் பத்து பேரை காவல்துறையினர் பிடித்துச்சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் தீ வைப்பு, வயல்வெளிகளைச் சேதப்படுத்திய சம்பவத்தால் காவல்துறை மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.