தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து மத்திய துணை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணை குழுவில் தமிழக பிரதிநிதிகளான செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரளா பிரதிநிதிகளான கேரளா நீர்பாசனத்துறை செயற் பொறியாளர் அருண் ஜேக்கப்.உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உடன் வந்தனர்.

Central Sub committee inspection on Mullaperiyar Dam

Advertisment

இந்த குழுவினர் ஆய்வு பணிக்காக அணை பகுதிக்கு சென்றனர். கடந்த ஜூலை10- ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 112.45 அடியாக இருந்த போது இக்குழு ஆய்வு நடத்தியது. தற்பொழுது நீர்மட்டம் 125.60 அடியாக உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் விரைவில் துவங்க உள்ளதால் அணை பகுதியில் மேற்கொள்ள படவேண்டிய பணிகள் குறித்து இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்பின் பிரதான அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகு பகுதி, நீர்வரத்து வெளியேற்றம் மற்றும் கசிவு நீர் குறித்து ஆலோசனை செய்தனர். அதை தொடர்ந்து இக்குழு குமுளியில் உள்ள அலுவலகத்தில் பெரியாறு அணை கண்காணிப்பு குறித்து இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். மேலும் இக்குழு தங்களது ஆய்வறிக்கையை குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவுக்கு அனுப்ப இருக்கிறது.