/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shoba-mini-modi-art.jpg)
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (N.I.A.) விசாரணை செய்து வருகிறது.
இத்தகைய சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art_56.jpg)
இதற்கிடையே தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஷோபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், “ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கத் தயார்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.09.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக மன்னிப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக மக்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஷோபா கரந்த்லஜே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஷோபா கரந்த்லஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சிக்கல்கள் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (05.09.2024) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)