Skip to main content

அதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திருச்சி சங்கம் நட்சத்திர விடுதியில் நடந்த ராணுவ தளவாட தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு கோவை, ஒசூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் பெரிய தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். 

 

tt

 

 

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, எம்பி.க்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி எம்.பி. என்கிற முறையில் குமார் பேசினார்.

 

அப்போது அவர் பேசும் போது, நான் துரதிர்ஷடமான எம்.பி. காரணம், திருச்சியில் மேம்பாலம் கட்டுவதற்கும், சர்வதேச விமானநிலையம் விரிவாகம் செய்வதற்காகவும் இராணுவத்தின் இடம் இடையே இருப்பதால் அந்த இடத்தை ஒதுக்கி தரும்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியிலிருந்த இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தொடங்கி, பி.ஜேபி மனோகர் பாரிக்கர், தற்போது உள்ள உங்களிடம் வரை கோரிக்கை வைத்தோம். ஆனால் தற்போது வரை நிறைவேற்றவில்லை என்றார்.

 

அதே போல் தற்போது மாநகரின் மையப்பகுதியான மன்னார்புரம் பகுதியில் இராணுவ இடம் சுமார் 500 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தை திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நிலம் கொடுக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை வைத்து பேசினார். 

 

இதை அடுத்து திருச்சி அமைச்சர் என்கிற முறையில் வெல்லமண்டி நடராஜன் பேசினார். அப்போது அவர் எம்.ஜி.ஆர், இரண்டாவது தலைநகரமாக ஆக்க நினைத்தார் ஜெயலலிதா. தன் சொந்தவூர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு தொகுதிக்கும் திருச்சிக்கும் நிறைய செய்தார், அதே போல நீங்களும் இங்கே தான் படித்தீர்கள் என்பதால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுங்கள். இராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் சிதிலடைந்து கிடக்கிறது அதை திருச்சி மக்களின் பயன்பாட்டிற்கு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். 

 

நிறைவாக பேசிய மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசும்போது இராணுவ தளவாடங்கள் குறித்து எல்லாம் பேசிவிட்டு கடைசியாக, திருச்சி தொகுதி பற்றி பேசினார். இங்கே அமைச்சர் பேசும் போது இராணுவ இடங்கள் சிதிலடைந்து இருப்பதாக சொன்னார். இராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் நீண்டகால திட்டத்தின் அடிப்படையிலே சில இடங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். அது சிதிலடைந்து தான் இருக்கும். காரணம், இருக்கிற நிதி எல்லாம், துப்பாக்கி, ஆயுதம் வாங்குவதற்கு ஒதுக்கி விடுவோம். இந்த இடங்களை சுத்தப்படுத்தி அழகு படுத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த இடங்களை யாருக்கும் தரமாட்டோம். ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது என்றால் கட்டாயம் நாங்கள் கொடுப்போம். உங்கள் எம்.பி. குமார், தேர்தலுக்காக ஏதோ புது கோரிக்கையாக மன்னார்புரம் பேருந்து நிலையத்திற்கு கேட்டிருக்கிறார். அந்த கோரிக்கை இன்னும் என்னிடம் வரவில்லை என்றார். உடனே கீழே இருந்த எம்.பி.யும், மாவட்ட செயலாளருமான குமார், இடம் மறித்து இது புது கோரிக்கை இல்லை மக்கள் என்னிடம் வைத்த பழைய கோரிக்கை இன்று நீங்கள் வந்ததால் உங்களிடம் நான் கோரிக்கையாக வைக்கிறோம். அதை மனுவாக கொடுக்கிறோம். ஆனால் மேம்பாலம், விமானநிலையத்திற்கு இடம் ஒதுக்கி தர சொன்ன கோரிக்கை நிலுவையில் இருக்கிறது என்றார். 

 

tt

 

 

உடனே கொஞ்சம் சிரித்துக்கொண்டே மத்திய அமைச்சர் மன்னார்புரம் மேம்பாலத்திற்கு, விமானநிலையத்திற்கு இடம் கேட்டு நீங்கள் அனுப்பினீர்கள் உண்மை தான் ஆனால் அதே மார்கெட் விலை கொண்ட இடத்தை மாநில அரசு வழங்கினால் இரண்டே நாட்களில் ராணுவ இடம் வழங்கப்படும் என்றும் சொல்லி பல மாதங்கள் ஆகிவிட்டது.உங்கள் மாநில அரசு தரப்பில் இருந்து இது வரைக்கும் எந்த கோப்பும் வரவில்லை. எங்களுக்கு அதே மதிப்புள்ள இடம் தமிழ்நாட்டில் வேறு எங்கு வேண்டுமானலும் கொடுங்கள் என்று சொல்லியும் இன்னும் எந்த கோப்பும் அனுப்பவில்லை. உங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை. உங்களிடம் தான் சுறுசுறுப்பு இல்லை என்பது போல் பேசி தள்ளினார். 

 

இந்த நேரத்தில் கீழே இருந்த அமைச்சர் மெதுவாக எழுந்து பணிவுடன் மேம்பாலம் கட்டுவதற்கு, விமான நிலையம் விரிவாகத்திற்கு திருச்சி இராணுவ இடத்திற்கு அதே விலைமதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் இடத்தை தேர்வு செய்து நாங்கள் 6 மாதத்திற்கு முன்பே உங்களுக்கு அனுப்பிட்டோம். ஆனால் இராணுவ அமைச்சர் துறையில் தான் அதை இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்று அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று சொல்லவும். அந்த அரங்கு கைத்தட்டலில் விண்ணை பிளந்தது. 

 

இதை உள்வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரம் முகம் மாறியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் சமாளித்து நான் திருச்சி வருவதற்கு முன்னாதாக என்னுடைய அலுவலக அதிகாரிகளை எல்லாம் கேட்டேன் திருச்சி சம்மந்தமான எதுவும் நிலுவையில் இருக்கிறாதா என்னை கேள்வி கேட்டு துளைத்து விடுவார்கள் என்று கேட்டேன். ஆனால் என்னுடைய அதிகாரிகள் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்றே என்னிடம் சொன்னார்கள். ஆனால் நீங்கள் 6 மாதம் முன்பே அனுப்பியதாக சொல்கிறீர்கள். சொல்பவர் அமைச்சர் என்பதால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது நாளைக்கே விசாரணை நடத்துகிறேன் என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தார். 

 

பிஜேபி மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றியவர் மோடி என்றும் மாநில அரசு ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைய திட்டங்களை நடத்தி வருகிறது என்றும் மத்திய அரசை பெரிய பிம்பம் போன்று பேசிய மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து அமைச்சர் எம்.பிகளின் பேச்சு அந்த அரங்கை பரபரப்பாக்கியது. 

 

திருச்சியில் மா.செ. குமாருக்கும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் திருச்சி சம்மந்தமான பொதுமக்கள் பிரச்சனைக்கு இரண்டு பேரும் சரிக்கு சமமாக பேசியது கட்சியினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.