Skip to main content

காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத நகரம் தூத்துக்குடி! - கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் திடுக் பதில்..!

Published on 26/07/2018 | Edited on 06/08/2018
Tuticorin


தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கம், உலக சுகாதார நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் இந்தியாவில் காற்று மாசுபாடுடைய 102 நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நகரங்களில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. கேட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.

’’நாட்டில் காற்று மாசு கொண்ட நகரங்களை ஆதார ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே.. அந்த நகரங்களின் பட்டியலை அரசு வெளியிடுமா? இந்த ஆய்வுக்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? காற்று மாசு கொண்ட நகரங்களில் காற்று மாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா?’’ என்று கேள்விகளை எழுத்துபூர்வமாக வைத்தார் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.

இதற்கு பதிலளித்த மத்திய வனம், சுற்றுச்சூழல்துறை, கால நிலை மாற்றத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, “தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கத்தின் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாத நகரங்கள் கண்டறியப்பட்டன. அதேநேரம் உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி காற்று மாசுநகரங்கள் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் மொத்தம் 102 நகரங்கள் காற்று மாசு கொண்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே காற்று மாசுபாடு கொண்ட நகராக இருக்கிறது.
 

 

 

காற்று மாசுக் கட்டுப்பாட்டை அடைய முடியாத நகரங்களில் இரண்டு ஆண்டுகளுக்குள் அதற்கான ஆய்வுகளை நடத்தி முடிக்க காற்றுத் தர கண்காணிப்பு இயக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றோடு இணைந்து பல்கலைக் கழகங்களில், கல்வி நிலையங்களில் காற்று மாசு கட்டுப்பாடு பற்றிய ஆய்வுகளை நடத்த இருக்கின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாடுமுழுதும் தூய காற்றுக்கான, காற்று தர கண்காணிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.

இதன்படி நாட்டிலுள்ள 29 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 307 நகரங்களில் மொத்தம் 703 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, சேலம், மேட்டூர், கோயமுத்தூர், கடலூர், திருச்சி ஆகிய எட்டு நகரங்களில் 31 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 703 நிலையங்களை ஆயிரம் காற்று தர கண்காணிப்பு நிலையங்களாக அதிகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை தவிர 17 மாநிலங்களில் 68 நகரங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தமிழகத்தில் சென்னையில் ஆலந்தூர், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இதேபோல இன்னும் 108 தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இவற்றில் 60 நிலையங்கள் 2019 ஜூன் மாதத்துக்குள் நிறுவப்படும். கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்படும். மற்ற நிலையங்கள் மாநில அரசுகளின் பங்கேற்போடு இந்த வருட இறுதிக்குள் அமைக்கப்படும்” என்று பதில் அளித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.