Skip to main content

காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத நகரம் தூத்துக்குடி! - கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் திடுக் பதில்..!

Published on 26/07/2018 | Edited on 06/08/2018
Tuticorin


தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கம், உலக சுகாதார நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் இந்தியாவில் காற்று மாசுபாடுடைய 102 நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நகரங்களில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. கேட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.

’’நாட்டில் காற்று மாசு கொண்ட நகரங்களை ஆதார ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே.. அந்த நகரங்களின் பட்டியலை அரசு வெளியிடுமா? இந்த ஆய்வுக்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? காற்று மாசு கொண்ட நகரங்களில் காற்று மாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா?’’ என்று கேள்விகளை எழுத்துபூர்வமாக வைத்தார் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.

இதற்கு பதிலளித்த மத்திய வனம், சுற்றுச்சூழல்துறை, கால நிலை மாற்றத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, “தேசிய காற்று தர கண்காணிப்பு இயக்கத்தின் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாத நகரங்கள் கண்டறியப்பட்டன. அதேநேரம் உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி காற்று மாசுநகரங்கள் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் மொத்தம் 102 நகரங்கள் காற்று மாசு கொண்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மட்டுமே காற்று மாசுபாடு கொண்ட நகராக இருக்கிறது.
 

 

 

காற்று மாசுக் கட்டுப்பாட்டை அடைய முடியாத நகரங்களில் இரண்டு ஆண்டுகளுக்குள் அதற்கான ஆய்வுகளை நடத்தி முடிக்க காற்றுத் தர கண்காணிப்பு இயக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றோடு இணைந்து பல்கலைக் கழகங்களில், கல்வி நிலையங்களில் காற்று மாசு கட்டுப்பாடு பற்றிய ஆய்வுகளை நடத்த இருக்கின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாடுமுழுதும் தூய காற்றுக்கான, காற்று தர கண்காணிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.

இதன்படி நாட்டிலுள்ள 29 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 307 நகரங்களில் மொத்தம் 703 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, சேலம், மேட்டூர், கோயமுத்தூர், கடலூர், திருச்சி ஆகிய எட்டு நகரங்களில் 31 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 703 நிலையங்களை ஆயிரம் காற்று தர கண்காணிப்பு நிலையங்களாக அதிகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை தவிர 17 மாநிலங்களில் 68 நகரங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தமிழகத்தில் சென்னையில் ஆலந்தூர், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இதேபோல இன்னும் 108 தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இவற்றில் 60 நிலையங்கள் 2019 ஜூன் மாதத்துக்குள் நிறுவப்படும். கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்படும். மற்ற நிலையங்கள் மாநில அரசுகளின் பங்கேற்போடு இந்த வருட இறுதிக்குள் அமைக்கப்படும்” என்று பதில் அளித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.