Advertisment

“விவசாயிகளை முற்றிலுமாக அழிக்க மத்திய அரசு துடிக்கிறது..” - கே. பாலகிருஷ்ணன்

publive-image

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து ஒன்றாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் வகையில் வெண்மணியில் பிரம்மாண்டமான மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25 அன்று நாடு முழுவதில் இருந்தும் பொதுமக்களும், பாட்டாளிவர்க்கத்தினரும், தலைவர்களும், அரசியல் கட்சியினரும் வந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்திவருகின்றனர்.

Advertisment

அந்த சோக சம்பவத்தின் 53வது ஆண்டு நினைவு தினம் கடந்த 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்துபோன குடிசை இருந்த இடம் புதுப்பிக்கப்பட்டு, நினைவிடமாக அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அங்கிருந்த நினைவு தூணில்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ. செளந்தரராஜன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

publive-image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “இன்றைக்கும் தமிழகத்தில் சாதிய கொடுமைகள் ஒழிந்த பாடில்லை. சாதிய சக்திகளை எதிர்த்து பல்வேறு அறிஞர்கள் இடதுசாரிகள் குரல் கொடுத்தாலும்கூட சாதிக்கொடுமையும், தீண்டாமை கொடுமையும் ஒழிந்தபாடில்லை.

மத்திய அரசு மிக மோசமான ஆட்சியை நடத்திவருகிறது. டெல்லியில் விவசாயிகள் போராடிய பிறகுதான் அந்தமூன்று சட்டங்களை வாபஸ் வாங்கினர். அந்த போராட்டத்தினை முடக்க எத்தனையோ வகையிலும் முயற்சி செய்தும் கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த விவசாயிகள் போராட்டத்திற்கு பிரதமர் மோடி மண்டியிட வேண்டிய கட்டாய நிலை உருவாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் காரணமாக மோடி அரசுக்கு இறங்கு முகமாக தோல்வி முகம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சேர்ந்து மகத்தான போராட்டத்தை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ளம், நோய்த்தொற்றை பார்த்தும் இதுவரைக்கும் ஒரு ரூபாய் நிவாரணம் கொடுக்ககூட மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்துக்கு இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே மத்திய அரசு உடனடியாக நிதியை ஒதுக்கி தர வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படாத அமைப்பாக உள்ளது. எனவே போதிய நிதி ஒதுக்கி, முழு அதிகாரமுள்ள ஆணையமாக செயல்படுத்தினால் மட்டுமே தவறுகளை, பாலியல் குற்றங்களை தடுக்க முடியும்.

கடந்த ஆட்சியில் எவ்வளவு போராடினாலும் கிடைக்காததால் போராட வேண்டியிருந்தது. இந்த அரசிடமும் கேட்டிருக்கிறோம் நிச்சயமாக கிடைக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அரசியல் கூட்டணியாக இருக்கிறோம். கூட்டணிக்காக எங்களின் போராட்டத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். விவசாயிகளை முற்றிலும் அழித்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விளைநிலங்களை ஒப்படைக்க நினைக்கிறது மத்திய அரசு” என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe