
நாட்டில் போதைப்பொருள் பரவலுக்கு காரணம் மத்திய அரசுதான் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''இந்த அளவிற்கு நாட்டில் போதைப்பொருள் பரவியதற்கு காரணம் மத்திய அரசுதான். குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் தான் அதிக அளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. துறைமுகங்களை தனியார் மயமாக்கியதே இதற்கு காரணம். குறிப்பாக தமிழகத்தை சொல்லவேண்டும் என்று சொன்னால் ஆந்திர மாநிலம் விஜயவாடா துறைமுகத்திலிருந்து தமிழகத்திற்கு வருகிறது.
விஜயவாடா துறைமுகத்திலிருந்து சென்னை பக்கத்தில் இருக்கிறது. ஆனால் அங்கு எதுவும் வரவில்லை. விஜயவாடாவிற்கும் முந்த்ரா துறைமுகத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடுகளிலிருந்து பல்வேறு கடத்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது ஒரு மாநிலத்திற்கு மட்டும் உட்பட்ட விஷயம் அல்ல. எல்லா மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை ஆனால் வெளிநாடுகளிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது'' என்றார்.