Centenary Celebration of Vaikam Struggle The CM released the video

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (12.12.2024) வைக்கம் நகரில் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இந்த விழாவிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், நன்றியுரை வழங்குகிறார். இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள மாநிலம் வைக்கம் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சின் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment