A cell phone for three children, Student commits suicide

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது ராம்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்புராயலு. இவருக்கு அஸ்மிதா(16), அபிநயா(12), அபினேஷ்(10) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் அஸ்மிதா பன்னிரண்டாம் வகுப்பும், அபிநயா அபினேஷ் ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். தற்போது கரோனா நோய் பரவல் காரணமாகபள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். சுப்பராயலு தன் பிள்ளைகள் படிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

Advertisment

மூன்று பிள்ளைகளும் அந்த ஒரு செல்போனில் அக்கா, தங்கை, தம்பி என மூவரும் ஆன்லைனில் பாடம் நடத்துவதை படிப்பதற்கு போட்டி போட்டுள்ளனர். ஒரே நேரத்தில் அவரவர் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை ஒரு செல்போனில் மூன்று பேர் படிப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்தவுடன் இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அக்கா, தங்கை, தம்பி ஆகிய மூவருக்கும் இடையே மீண்டும் செல்போனில் ஆசிரியரிடம் இணையவழி பாடம் நடத்துவதை கேட்டு அதன்படி படிப்பதற்கு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுள்ளனர். இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மூத்த பெண் அஸ்மிதா கோபத்தின் காரணமாக வீட்டில் விவசாய பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதை அறிந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போய்விட்டார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இணையவழி மூலம் கல்வி பயில்வதற்காக மூன்று பிள்ளைகள் ஒரு செல்போன் மூலம் படிக்க முடியாமல் போனதோடு அவர்களுக்கு ஏற்பட்ட சச்சரவின் காரணமாக ஒரு பெண் பிள்ளை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment