Cell phone seized from notorious rowdy in Central Jail

Advertisment

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பிரபல ரவுடி வினோத் என்கிற வினோத்குமார் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஒதியஞ்சாலை பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி உட்பட இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத்குமார், விசாரணைக் கைதி பிளாக்கில் உள்ளார்.

இந்நிலையில் சிறை வார்டன்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, பிரபல ரவுடி வினோத் செல்போன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சிறை சூப்பிரண்டு பாஸ்கரனிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வினோத்குமார் அடைக்கப்பட்ட அறையில் சென்று பார்த்தபோது, அங்கு விலை உயர்ந்த செல்போன் இருந்தது. அதனைப் பறிமுதல் செய்த சிறை சூப்பிரண்டு பாஸ்கரன், இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவினையடுத்து காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, வினோத்குமார் மீது வழக்குப் பதிவு செய்தார்.

மேலும் கைதி வினோத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் சிறைக்குள் எப்படி வந்தது? செல்போனை கொடுத்தது யார்? யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்?நீதிமன்றத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது கொண்டு வந்தார்களா? அல்லது வேறுவழியாக செல்போன் சிறைக்குள் கொண்டுவரப்பட்டதா? ஆகியன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வினோத் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது செல்போன் மூலமாகப் பேசி இரட்டைக் கொலையை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.