Skip to main content

பழனி முருகன் கோவிலுக்கு செல்ஃபோன் கொண்டுவரத் தடை!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

cell phone restriction on Palani Murugan temple


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி கோவிலில் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
               

அதன்படி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமுருகன் கோவிலில் தற்போது முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முன் அனுமதிச் சீட்டு பெற்று, முருகனை தரிசித்து வருகின்றனர். மேலும் படிப்பாதை நுழைவுப் பகுதியில் மருத்துவக் குழுவினர் காய்ச்சல், சளி உள்ளிட்டவை பரிசோதனை செய்து பக்தர்களை அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்வது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

              

இதுகுறித்து கோவில் ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, திங்கட்கிழமை முதல் வெளி மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவார்கள். தற்போது அடிவாரத்திலிருந்து மலைக் கோவிலுக்குச் செல்வதற்காக மின் இழுவை ரயில் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் படிப்பாதை வழியே சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 1,500 பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் நலன்கருதி பாதை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடிவாரத்திலிருந்து குடமுழக்கு அரங்கு வழியே படிப்பாதை செல்லவும், தரிசனம் முடிந்துத் திரும்பி வரும் பக்தர்கள் பாத விநாயகர் கோவில் வெளியே வருவதற்கும் பாதை மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மழையில் நனைவது தடுக்கப்படும். இதற்காக ஆங்கங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் விரைவில் அதிக அளவில் பக்தர்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

 

பழனி கோவில் வளாகப் பகுதியில் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் செல்ஃபோனை கோவிலுக்குக் கொண்டு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் செல்ஃபோன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கோவிலுக்குள் உள்ள பகுதிகளில் செல்ஃபோனை வாங்கி அதைப் பாதுகாத்து தரிசனம் முடிந்து பெற்றுச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் செல்ஃபோன் வைக்கும் சிறிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் கோலாகலக் கொண்டாட்டம்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Murugan Temples Celebrate Thaipusam

தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளான திருத்தணி, பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் உட்பட நூற்றுக்கணக்கான முருகர் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்னகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் பாலமுருகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகமும் மற்றும் தங்க அங்கி அலங்காரமும் செய்யப்பட்டு மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பாலமுருகப் பெருமான் மயில் மீது அமர்ந்தபடி பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாளித்தார். அடுத்ததாக தங்க ரதத்தை பக்தர்கள் இழுத்துச் செல்ல கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு  அருள் பாளித்தார்.

இந்த தைப்பூச நிகழ்வின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குடும்பம் குடும்பமாக வருகை தந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.

Next Story

‘திருத்தணி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு’ - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Attention Devotees going to Thiruthani Temple Important Announcement by Temple Administration

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையில் மிக்ஜாம் புயல் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் படி வழியினை மட்டுமே பயன்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜாம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையின் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடை விதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படி வழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இலேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப் பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி (20.12.2023) வரை பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல படி வழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.