Celebrating Pongal to see; Crowds at tourist spots in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி கோவில்கள், சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் குவிந்து பொழுதுபோக்கு அம்சங்களின் ஈடுபட்டனர். கடலூர் வெள்ளிக்கடற்கரையில் புதன் கிழமை மாலை கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்துனர். பின்னர் கடல் அலையின் அழகை ரசித்தனர். அங்கு மாவட்ட நிர்வாகத்தினால் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரியையும் கண்டு களித்தனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதித்துள்ளது.

இதுபோல கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையில் பிரசித்தி பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சிதம்பரம் அருகே உள்ள பிச்சாரம் சுற்றுலா மையத்தில் காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சுரபுன்னை காடுகளின் அழகை ரசித்த வாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அண்ணாமலை நகர், சிவபுரி, பெராம்பட்டு, வல்லம்படுகை, நடராஜபுரம் குமாரமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கோவில் வெளி பிரகாரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரங்கால் மண்டம் அருகே உள்ள பகுதியில் பெண்கள் பல குழுக்களாக பிரிந்து கும்மி அடித்தும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Advertisment

இளம் பெண்கள் கோகோ, கபடி விளையாடினர். கிராமப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மதிய உணவை எடுத்து வந்து உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டமாக அமர்ந்து உண்டனர். பல்வேறு சிலம்ப பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினர். மல்லர் கம்பம், இளவட்டம் கல் தூக்குவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து. ஆயிரக்கணக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.