கடந்த 20ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கபாலீஸ்வரர் அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் களைகட்டியது. அதோடு கடலூர் பஸ் நிலையத்தில் தட்டு தட்டாக இனிப்பு வகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதிமுக கரை வேட்டி கட்டிய 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் திரண்டு கலந்து கொண்டனர். இதை கண்ட பொதுமக்கள் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். நிகழ்ச்சியில் அதிமுக கடலூர் ஒன்றிய சேர்மன் பக்கிரி தலைமையில் மாவட்ட ஜெ. பேரவை சுப்பிரமணியன், பொதுக்குழு காமராஜ், அவைத்தலைவர் ஜெயகாந்தன், எக்ஸ் சேர்மன் குமார் என கட்சி முன்னோடிகள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 Cuddalore District

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தாமரைக் குளம் ஹெர்பேஜ் இந்தியா முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று முழுவதும் கடலூர் பகுதியில் பரபரப்பான விழாவாக நடத்தப்பட்டது. இதைக் கண்டு பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் பரபரப்பாக பேசிக் கொண்டனர். கட்சியின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்லது இன்னாள் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரில் யாருக்காவது இன்று பிறந்தநாள் விழாவோ என பலவாறு பேசிக் கொண்டனர்.

Advertisment

ஆனால் உண்மை என்னவென்றால் கடலூர் மாவட்ட மந்திரியும் கட்சியின் மா.செ.வுவமான எம்சி சம்பத்தின் மகன் பிரவீன் அவர்களுக்கு பிறந்தநாள் அதற்குத்தான் இத்தனை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. பிரவீன் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடிய கட்சியினர் மத்தியில் விசாரித்தபோது, அமைச்சரின் வாரிசு வருங்காலத்தில் அரசியல் களத்தில் பிரவேசிக்க போகிறார். அதற்கான முன்னோட்டம் தான். அவர் பிறந்த நாளை நாங்கள் விமரிசையாக கொண்டாடுகிறோம். அமைச்சரை விட அவரது மகன் பிரவீன் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் பிரவீன் கட்சிக்காரர்களுக்கும் அவர்கள் வீட்டு குடும்ப விசேஷங்களிலும் தவறாமல் கலந்து கொள்வார். அதோடு அன்பளிப்புகளையும் தாராளமாக வழங்கி அசத்துவார். உதவி என்று அவரிடம் சென்று கேட்பவர்களுக்கு அப்பாவை விட தாராளமாக தான தர்மம் செய்வதில் தாராள மனம் கொண்டவர்.

அப்படிப்பட்டவரை அரசியலுக்குக் கொண்டுவருவதில் என்ன தவறு அதற்கான முழுத் தகுதியும் திறமையும் அவரிடம் உள்ளது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த பிறந்தநாள் விழா என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். பொதுவாக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, திருச்சி அன்பில் தர்மலிங்கம் பேரன் பொய்யாமொழி என பல முக்கிய கட்சிகளில் எல்லாம் வாரிசு அரசியல் என்பது கொடிகட்டி பறக்கிறது. அது தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட நிலையில் எங்கள் அமைச்சரின் மகன் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள் இதற்கு அமைச்சரின் மறைமுக ஆதரவும் பலமாக உள்ளதாம் மேலும் அமைச்சர் சம்பத் அரசியலில் தன் மகன் பிரவீன் அரசியலில் வளர நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை அதே நேரத்தில் உள்குத்து அரசியலில் வென்று காட்ட வேண்டும் அதில் அமைச்சர் தரப்பு கோட்டை விட்டு உள்ளது அதற்கு உதாரணம் அமைச்சரின் சொந்த ஊரான மேல் குமாரமங்கலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் அண்ணன் மனைவி திருமதி அவர்கள் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் அவர் வெற்றி பெறுவதற்கு சுமார் அமைச்சர் திறப்பு சுமார் 90 எல் வரை செலவு செய்தும் அவர் வெற்றி பெறவில்லை அவரை எதிர்த்து போட்டியிட்டவர் அவருக்கு ஆதரவாக அமைச்சரின் எதிர்ப்பு அரசியல்வாதியான பண்ருட்டி எம்எல்ஏ சத்யாவும் அவரது கணவர் பன்னீர் செல்வமும் அந்தப் போட்டி வேட்பாளருக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார்களாம்.

Advertisment

அதனால் அந்த போட்டி வேட்பாளர் 70 எல் வரை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார் இதன் மூலம் உள்ளூரில் அமைச்சர் தன் செல்வாக்கை நிலைநாட்ட முடிய வில்லை இந்த நிலையில் போது அமைச்சர் தரப்பு மாவட்ட அரசியலில் தனது மகனை முன்னிறுத்தி செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.

இந்த பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் அமைச்சரின் மகன் பிரவீன் நேரடியாக வந்து எதிலும் கலந்து கொள்ள வில்லை ஆனால் கட்சியினர் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளனர் வாழ்க அரசியல் வளர்க அரசியல் வாரிசுகள் என்று வாழ்த்துகிறார்கள் வாக்காள பெருமக்கள்.