Skip to main content

சி.சி.டி.வி. கேமராக்கள் "மூன்றாவது கண்" - எஸ்.பி. தங்கதுரை பேட்டி...

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

cctv cameras erode police sp press meet

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்த ரேகா என்ற பெண், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை தொடர்பாக செந்தில் குமார் என்ற பெயிண்டரை கைது செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியில் கொலை செய்தவரின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த நபரை ஒரே நாளில் மடக்கிப் பிடித்தனர்.

 

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், "குற்றச் சம்பவங்களை தடுக்க மற்றும் அவற்றை கண்டுபிடிக்க 'மூன்றாவது கண்' என அழைக்கப்படும் சி.சி.டி.வி கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு இந்த கேமராக்களின் பயன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஈரோடு மாநகரில் முக்கியச் சாலை மற்றும் சாலை சந்திப்புகளில் மாவட்ட காவல்துறை சார்பில் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தி உள்ளோம். ஏற்கனவே 320 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 415 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறன.

 

சி.சி.டி.வி. கேமராக்களின் பயன்பாடு மிக அத்தியாவசியமானது. பொதுமக்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து வீடுகளில் பொருத்தவேண்டும். மிகக் குறைந்த விலையிலேயே இன்று தரமான சி.சி.டி.வி கேமராக்கள் கிடைக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். ஈரோட்டில் ஏற்கனவே 320 கேமராக்கள் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 415 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும். பொதுமக்கள் அவசர நேரங்களில் போலீசாரை அணுகுவதற்கு 'காவலன் எஸ்.ஓ.எஸ்' செயலி உள்ளது. இதைப் பெண்கள் தங்களது ஸ்மார்ட் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு அவசரத் தேவைக்கு அழைக்கலாம். மேலும் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.